வீட்டு கூரைகளில் சூரிய மின்சாரம்: இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.8,455 கோடி நிதி

எரிசக்தித் துறையில் சுமார் 17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
வீட்டு கூரைகளில் சூரிய மின்சாரம்: இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.8,455 கோடி நிதி
Published on

சென்னை,

இந்தியாவில் வீடுகளின் மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தித் திட்டத்தை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், ரூ.8,482 கோடி (890 மில்லியன் டாலர்) கடனுதவி வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.

மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கிய 'பிரதமரின் சூர்யகர்: முப்த் பிஜ்லி யோஜனா' திட்டம், வீடுகளின் கூரைகளில் சூரிய மின் தகடுகள் அமைப்பதை ஊக்குவிக்கும் திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1 கோடி வீடுகளில் கூரைமேல் சூரிய மின்சார அமைப்புகள் நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக சூரிய மின்சார தகடுகள் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

இந்த திட்டத்திற்கு உலக வங்கி 89 கோடி டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,455 கோடி நிதி வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுமார் ஒரு கோடி வீடுகளில் கூரைமேல் சூரிய மின்சார அமைப்புகள் நிறுவப்பட உள்ளன.

உலக வங்கியின் நிதியுடன் சேர்த்து, வணிக வங்கிகள் மூலம் சுமார் 420 கோடி டாலர் (ரூ.39 ஆயிரத்து 900 கோடி) அளவிலான தனியார் கடன்களும் திரட்டப்பட உள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் சூரிய மின்சார அமைப்புகளை நிறுவுவதற்கான நிதி வசதிகளை எளிதாகப் பெற முடியும். இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் சுமார் 17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பாக சூரிய மின்சார உபகரணங்கள் உற்பத்தி, நிறுவுதல், பராமரிப்பு மற்றும் சேவைத் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வீடுகளின் கூரைகளில் சூரிய மின்சார பலகைகள் அமைக்கப்படுவதால் குடும்பங்களின் மாதாந்திர மின்கட்டணம் கணிசமாக குறையும். அதே நேரத்தில், மின்சார வினியோக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் விற்பனையாளர்களின் சேவைத் திறனும் மேம்படும் என்று உலக வங்கி கூறியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com