

மும்பை,
புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிதிஆண்டின் இறுதி மாதமான மார்ச் மாதம் 200 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணியானது நிறைவு பெறும் அதனைத் தொடர்ந்து புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இப்போது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும், எந்தஒரு இடையூறுமின்றி படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரி கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது. புதிய 100 ரூபாய் நோட்டின் உயரம் மற்றும் அகலத்தில் மாற்றம் இருக்காது எனவும், ஏடிஎம் வழியாக மக்களை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. இப்போது ஏடிஎம்களில் 100 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் ஏடிஎம் வழியாக பொதுமக்களை சென்றடையவில்லை. மாறாக வங்கிகள் மூலம் சென்றடைகிறது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் மத்திய அரசு நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது. மாறாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது. டிசம்பர் மாதம் இனி அனைத்து நோட்டுக்களும் புதிய வடிவமைப்புகளுடனே வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி புதிய நோட்டுக்கள் எல்லாம் புதிய வடிவமைப்புடன் வருகிறது. ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டதும், நாடு முழுவதும் இருந்த ஏடிஎம்களில் புதிய நோட்டுக்களை வழங்கும் வகையில் புணரமைப்பு பணிகள் நடைபெற்றது. உயர் மதிப்புடைய நோட்டுக்களுக்கு எளிதாக சில்லரை கிடைக்கும் வகையில் 200 ரூபாய் நோட்டுக்கள் கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் இப்போதும் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க ஆர்வம் கொள்வது கிடையாது என வங்கி பணியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.