

பெங்களூரு,
பெங்களூருவில் அண்மையில் தேர்வு செய்யப்பட்ட துணை மேயர் ரமிலா உமாசங்கர் (வயது 44) மாரடைப்பால் உயிரிழந்தார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ரமிலா உமாசங்கர், நேற்று இரவு கடுமையான நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச்சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.45 மணியளவில் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
துணை மேயர் உமாசங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இன்று பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, உமா சங்கர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.