3 மாநிலங்களில் போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை சோதனை

போதைப்பொருள், பயங்கரவாத கும்பலுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை 3 மாநிலங்களில் சோதனை நடத்தியது.
3 மாநிலங்களில் போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை சோதனை
Published on

புதுடெல்லி,

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தி வருவதில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரவுடி கும்பல்களுக்கான தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாக என்.ஐ.ஏ. சந்தேகப்படுகிறது.

பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா, கடந்த மே 29-ந் தேதி, மன்சா நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அக்கொலைக்கு தாதா கும்பலை சேர்ந்த கோல்டி பிரார் என்பவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலருக்கு போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று என்.ஐ.ஏ. கருதுகிறது. எனவே, நேற்று இவ்வழக்கில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது. பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களில் இச்சோதனை நடந்தது.

பாடகர் மூஸ்வாலா கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கோல்டி பிரார், ஜக்கு பகவான்புரியா ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com