நிபா வைரஸ்; நற்கருணையை நாக்கில் கொடுக்காமல் கைகளில் வழங்க சிரோ மலபார் சர்ச் முடிவு

கேரளாவில் நிபா வைரஸால் 16 பேர் உயிரிழந்த நிலையில் சிரோ மலபார் சர்ச் ஆனது நற்கருணையை நாக்கில் கொடுக்காமல் அதனை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
நிபா வைரஸ்; நற்கருணையை நாக்கில் கொடுக்காமல் கைகளில் வழங்க சிரோ மலபார் சர்ச் முடிவு
Published on

கோழிக்கோடு,

கேரளாவின் கோழிக்கோடு நகரில் தாமரசேரி பகுதியில் அமைந்துள்ளது சிரோ மலபார் கிறிஸ்தவ ஆலயம். கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பினை தொடர்ந்து இந்த கிறிஸ்தவ டையோசீஸ் சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் ரொட்டி மற்றும் திராட்சை ரசம் ஆகியவை கொண்ட நற்கருணையானது நாக்கில் கொடுப்பதற்கு பதிலாக அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகளில் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று ஞானஸ்நானங்கள், கிரகபிரவேசங்கள், திருமணங்கள் மற்றும் ஜெப கூட்டங்கள் ஆகியவற்றையும் தள்ளி வைக்கலாம். அவற்றை வேறு நாட்களில் நடத்திடலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேவையற்ற பயணங்கள், பொது கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இறை நம்பிக்கையாளர்கள் இந்த வைரஸ் பாதிப்பிற்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 16 பேரை வைரஸ் பலிகொண்டுள்ளது. அதனால் மாநில அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் பேராயர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com