

புதுடெல்லி,
என்ஜினீயரிங் படிப்புகளில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் போன்றவை முக்கிய பாடங்களாக தொடர்ந்து இருக்கும் எனவும், அதேநேரம் 12-ம் வகுப்பில் இந்த பாடங்களை படிக்காத மாணவர்களுக்கு மாநில அரசுகள் அல்லது நிறுவனங்கள் இந்த பாடங்களை வழங்க வேண்டிய கட்டாயமில்லை எனவும் ஏ.ஐ.சி.டி.இ. அறிவித்தது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்தவகையில் நிதி ஆயோக் உறுப்பினரும் (அறிவியல்), மூத்த விஞ்ஞானியுமான சரஸ்வத்தும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், உயிரி மருத்துவம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் கூட கணிதம், இயற்பியல் போன்ற பாடங்கள் தேவைப்படுகின்றன. நெகிழ்வுத்தன்மை என்ற பெயரில் பொறியியல் துறையில் நுழையும் மாணவர்களின் தரத்தை குறைப்பது பேரழிவை தரும். ஏனெனில் மாணவர்களால் அடிப்படை பொறியியல் கல்வியை கற்க முடியாது என்று தெரிவித்தார்.
ஏ.ஐ.சி.டி.இ.யின் இந்த முடிவு என்ஜினீயரிங் படிப்பின் தரத்தை பாதிக்கும் எனக்கூறிய அவர், எனவே இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.