

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி ஆய்வு
கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த ஒருவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உண்டா என்பது தொடர்பாக இதுவரை எந்த ஆதாரபூர்வமான தகவலும் இல்லை என்ற நிலை நிலவி வந்தது.ஆனால் இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முதல் கட்டமாக ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளன.
தொற்று பரவ வாய்ப்பு இல்லை
இதுபற்றி அந்த ஆஸ்பத்திரியின் தடயவியல் துறைத்தலைவர் டாக்டர் சுதீர் குப்தா கூறியதாவது:-
கடந்த ஓராண்டு காலமாக எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் தடயவியல் துறை சார்பில், கொரோனாவில் பலியானவர்களின் உடல்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தி வந்தோம்.கிட்டத்தட்ட 100 உடல்களை கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை மறு ஆய்வு செய்தோம். உயிர் பிரிந்த 12 முதல் 24 மணி நேரத்தில் இதைச்செய்தோம்.இறந்து 24 மணிநேரத்திற்கு பின்னர் ஒருவரது உடலில் குறிப்பாக மூக்கு மற்றும் வாய் குழிகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரிய வந்தது.எனவே ஒருவர் இறந்து 12 முதல் 24 மணி நேரமானபின்னர், அவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை.
அஸ்தி சேகரிக்கலாம்
கொரோனாவால் ஒருவர் இறந்த பின்னர். உடல் திரவங்கள் மற்றும் பிற கசிவுகளைத் தடுக்கிற பாதுகாப்பு நோக்கங்களுக்காக மூக்கு, வாய் குழிகள் மூடப்பட்டு விடவேண்டும்.இப்படி கொரோனாவால் இறந்தவர்கள் உடல்களைக் கையாள்கிறவர்கள், கண்டிப்பாக பாதுகாப்பு கவச உடைகள், முக கவசம், கையுறைகள் அணிந்து கொள்ள வேண்டும்.தகனம் செய்தபின்னர் எலும்புகள், அஸ்தி சேகரிக்கலாம். இது பாதுகாப்பானதுதான். தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இல்லை.இறந்தவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த ஆய்வை நடத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.