

புதுடெல்லி,
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 10-ந் தேதி அவர் டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரது மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் கோமா நிலையை அடைந்தார்.
பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து ராணுவ ஆஸ்பத்திரி சார்பில் நேற்று மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவரது மருத்துவ பரிசோதனை அளவீடுகள் சீராக உள்ளன. தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பல்வேறு இணை நோய்களால் அவதிப்படுகிறார். அவரது உடல்நிலையை சிறப்பு மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை முன்பை விட நன்றாக இருப்பதாக அவருடைய மகன் அபிஜித் முகர்ஜி நேற்று தெரிவித்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என் தந்தையை 15-ந் தேதி ஆஸ்பத்திரியில் பார்த்தேன். கடவுளின் கருணையாலும், உங்கள் நல்வாழ்த்துகளாலும் அவரது உடல்நிலை சீராக உள்ளது. முன்பைவிட சிறப்பாக இருக்கிறது.
அவரது உடல், சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது. விரைவிலேயே அவர் குணமடைந்து நம்முடன் இருப்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.