

பெங்களூரு,
பள்ளிக்கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பியூசி 2-ம் ஆண்டு மாணவர்களின் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் விருப்பங்களை தெரிவிக்கும் படி கூறி இருந்தது.
இந்நிலையில் ஜே.இ.இ. தேர்வு தேதிகள் இடையில் வருவதால் மாணவர்கள் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் தேர்வு தேதியில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது, ஆனால் பாடங்களை வேண்டுமெனில் மாற்றி அமைக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வு மே 24-ம் தேதிக்கும் 28-ம் தேதிக்கும் இடையில் நடைபெற உள்ளதாக கூறி தேர்வை ஒத்திவைக்கும்படி தெரிவித்தனர். ஆனால் ஜே.இ.இ. தேர்வு எழுத ஆண்டுக்கு 4 முறை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. ஜூலையிலும் தேர்வை எழுதலாம். தொடர்ந்து அடுத்தடுத்து பல போட்டி தேர்வுகள் நடைபெற உள்ளதால் தேர்வை ஒத்தி வைக்க முடியாது. ஆனால் பாடங்களில் மட்டும் மாற்றம் செய்யலாம் என்று தெரிவித்தனர்.