கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு இல்லை - சுப்ரீம் கோர்ட்டு

மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.
Arvind Kejriwal
Published on

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 1-ந் தேதி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக, ஜூன் 1-ந் தேதிவரை அவருக்கு இடைக்கால ஜாமீன் அளித்து, கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அவர் ஜூன் 2-ந் தேதி சிறைக்கு திரும்ப வேண்டும் என்றும் கூறியது. அதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

இடைக்கால ஜாமீன் முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், ஜாமீனை நீட்டிக்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

"நான் 7 கிலோ உடல் எடை குறைந்து விட்டேன். எனது சர்க்கரை அளவு தொடர்பான 'கீடோன்' அளவு அதிகரித்து விட்டது. அது, கடுமையான நோய்வாய்ப்படுதலுக்கு அறிகுறி ஆகும். எனவே, பெட்-சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டி இருக்கிறது. ஆகவே, எனக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டு கோடைகால நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரிய கெஜ்ரிவாலின் மனுவை நிராகரித்தனர். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது, ஜாமீன் நீட்டிப்பு குறித்து தலைமை நீதிபதிகள் அமர்வு தான் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com