வேறுகட்சியில் சேரும் எண்ணம் இல்லை- அமரிந்தர் சிங் திட்டவட்டம்

பஞ்சாப் மாநில முதல்-மந்திரி வீட்டை காலி செய்வதற்காகவே தான் டெல்லி வந்ததாக அமரிந்தர் சிங் விளக்கம் அளித்து உள்ளார்.
வேறுகட்சியில் சேரும் எண்ணம் இல்லை- அமரிந்தர் சிங் திட்டவட்டம்
Published on

புதுடெல்லி

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை அமரிந்தர் சிங் அவமானமாக கருதினார். இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையானது.

இதை தொடர்ந்து முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்தது சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.

நவ்ஜோத் சிங் சித்துவுடனான கடுமையான மோதலைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, கேப்டன் அமரிந்தர் சிங் நேற்று திடீர் பயணமாக டெல்லி சென்றார். அங்கு அவர் பா.ஜ.க தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.அமரிந்தர் சிங் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதால் அவர் பாரதிய ஜனதாவில் இணையப் பேவதாக பேச்சுகள் அடிபட்டன.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக நவ்ஜோத்சிங் சித்து தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

ஆனால் டெல்லியில் பேட்டி அளித்த அமரிந்தர் சிங் வேறு கட்சியில் இணையும் எண்ணம் தனக்கு இல்லை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பஞ்சாப் மாநில முதல்-மந்திரி வீட்டை காலி செய்வதற்காகவே தான் வந்ததாகவும் அவர் விளக்கம் அளித்து, பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com