

பெங்களூரு,
அடுத்து நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கூறியதாவது:
நடந்த முடிந்த 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறது.இது மிகப்பெரிய சாதனை வெற்றியாகும். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜனதாவினருக்கு இடையே இருந்த ஒற்றுமையே காரணமாகும். பா.ஜனதா கட்சியினர் 24 மணிநேரமும் வெற்றிக்காக உழைத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடி என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகள் மூலம், கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடிப்பது உறுதி.இவ்வாறு அவர் பேசினார்.