

புதுடெல்லி,
டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012ம் ஆண்டு 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் ராம்சிங் என்பவர் சிறையில் தற்கொலை செய்து கொள்ள, சிறுவனான ஒரு குற்றவாளி 3 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானான்.
மீதமுள்ள முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கோர்ட்டு விதித்த இந்த தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.
இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22ந்தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்கிலிட வேண்டும் என விசாரணை கோர்ட்டு கடந்த 7ந்தேதி மரண வாரண்டு பிறப்பித்தது. இதற்காக திகார் சிறையில் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இந்த மனுவை பரிசீலித்து வந்த உள்துறை அமைச்சகம், இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் முகேஷ் குமார் சிங் கருணை கோரியதை நிராகரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் கேட்டுக் கொண்டதாக செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. முகேஷ் சிங் தூக்கு மேடையில் இருந்து தப்பிப்பதற்கான எந்தவொரு சாத்திய கூறுகளையும் முடிவுக்குக் கொண்டுவர அமித் ஷாவின் பரிந்துரை நேற்றிரவு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.