

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவில் பேசிய தலைமை நீதிபதி என்.வி ரமணா, நாடாளுமன்றத்தில் உரிய விவாதங்கள் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். நீதிபதி என்.வி ரமணா மேலும் கூறுகையில்,
போதுமான விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதால் அதிக வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. போதுமான விவாதங்கள் நடைபெறாததால் சட்டத்தின் நோக்கங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.
விவாதங்கள் இன்றி புதிய சட்டங்களை இயற்றுவது வருத்தமளிக்கிறது. சட்டங்களில் எந்த தெளிவும் இல்லை. சட்டத்தின் நோக்கம் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. பொதுமக்களுக்கு இதுவும் கூட இழப்புதான். சட்டம் இயற்றுதலில் நிறைய இடைவெளியையும் தெளிவின்மையையும் காண முடிகிறது என்றார்.