

பெங்களுரூ.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மைசூரு அருகே உள்ள கோயிலில் நடக்கும் அபிஷேகத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும், பெங்களூரு - மைசூரு இரட்டை ரயில் பாதை திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு மைசூரு நகருக்கு வந்தார்.
வழக்கமாக பிரதமர் மோடி மைசூரு நகருக்கு வந்தால் அங்குள்ள உள்ள புகழ்பெற்ற லலிதா மஹால் பேலஸ் ஹோட்டலில் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்படும். இந்த முறையும் பிரதமர் தங்குவதற்காக லலித் மஹால் பேலஸில் அறைகள் கேட்கப்பட்டன. ஆனால் திருமண சீசன் என்பதால், அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக ஹோட்டல் நிர்வாகம் கூறிவிட்டது. இதையடுத்து மோடிக்கு, ஹோட்டல் ரேடிஸன் புளூவில் அதிகாரிகள் அறை எடுத்து தங்க வைத்தனர்.
ரேடிஸன் புளூ ஓட்டலிலும் தொழிலதிபர் ஒருவர் குடும்பத்தின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் நேரத்தை மற்றியமைக்க ஹோட்டல் நிர்வாகம் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சியின் நேரம் மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் அதன்காரணமாகவே, பிரதமர் வருகைக்கு முன்பாக நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.