

முசாபர்நகர்,
கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு போராட்டத்தின் போது, ரயில் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு அம்மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தற்போது பாஜக எம்.எல்.ஏக்களாக உள்ள இருவருக்கு எதிராகவும் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்த முசாபர் நகர் எம்.எல்.ஏ கபில் அகர்வால் மற்றும் புதனா தொகுதி எம்.எல்.ஏ உமேஷ் மாலிக், ஆகிய இருவருக்கு எதிராகவும் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீஸுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.