

பெங்களூரு,
தார்வாரில் முஸ்லிம் வியாபாரி ஒருவரை சிலர் தாக்கி அவர் விற்பனை செய்ய வைத்திருந்த தர்ப்பூசணி பழங்களை அழித்தனர். இந்த நிலையில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி தார்வாரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அமைதி-மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்கள் மற்றும் அவர்கள் நடவடிக்கை எடுப்பது என்பது வேறு விஷயம். இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். மத அடிப்படைவாதிகள் பிரச்சினையை தூண்டிவிடுகிறார்கள். இதை ஜனநாயக ரீதியில் செயல்படும் அமைப்புகள் மற்றும் அரசு எதிர்க்க வேண்டும்.
அனைவரும் மத நல்லிணக்கத்தை காக்க வேண்டும். முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே மாதிரி பார்க்கக்கூடாது. அவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்ற முடிவுக்கு வருவது தவறானது. யாரும் அத்தகைய மனநிலையை வளர்த்து கொள்ள கூடாது. சட்டத்தை கையில் எடுக்காமல் அனைவரும் பொறுமை காக்க வேண்டும். இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.