

புதுடெல்லி,
குஜராத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, 6-வது முறையாக அங்கு ஆட்சி அமைக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. குஜராத்தில் முதல் மந்திரியாக யார் பொறுப்பேற்பார்கள் என்பது குறித்து அக்கட்சி மேலிடம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், பாஜகவின் பல்வேறு முக்கிய தலைவர்களின் பெயர்கள் முதல்வர் பதவிக்கு அடிபடுகின்றன.
அந்த வகையில், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ஸ்மிரி இராணி இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து ஸ்மிரிதி இராணி கூறுகையில், இவை அனைத்தும் வதந்தி என்றார். மத்திய ஜவுளி மற்றும் தகவல்- ஒலிபரப்பு துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஸ்மிருதி இரானி, குஜராத் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து வருகிறார்.
குஜராத் தேர்தலில் எதிர்பார்த்ததை விட குறைவான இடங்களிலேயே பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளதால் முதல்வரை மாற்ற தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.புதிய முதல்வராக, துணை முதல்வராக உள்ள நிதின் பட்டேலை நியமித்தால் பட்டேல் சமூக மக்களின் எதிர்ப்பை சமாளிக்கலாம் என தலைமை கருதுவதாக கூறப்படுகிறது. குஜராத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்ய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அடுத்த வாரம் குஜராத் செல்ல உள்ளார்.