ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி : அரசியலமைப்புப்படியே செயல்படுவேன்- கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா

கவர்னர் மாளிகைக்கு சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அரசியலமைப்புப்படியே செயல்படுவேன் என கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா கூறி உள்ளார்.
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி : அரசியலமைப்புப்படியே செயல்படுவேன்- கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா
Published on

ஜெய்ப்பூர்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று, சட்டசபையை கூட்ட வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராஜஸ்தான் அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபை கூடுவதற்கான தேதியை அறிவிக்கும் வரை அங்கிருந்து செல்லமாட்டோம் என கூறிய அவர்கள், மதிப்புக்குரிய கவர்னரே சட்டசபையை காப்பாற்றுங்கள் என கோஷமிட்டவாறே தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களிடம் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் கூறுகையில், சட்டசபையை கூட்ட வேண்டாம் என்று யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. இந்த விவகாரத்தில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன. அது குறித்த விளக்கம் அளித்தால், சட்டசபையை கூட்டுவது குறித்து பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகையில் தர்ணாவில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏ.க்கள், போராட்டத்தை கைவிட்டு முதல்-மந்திரியுடன் ஓட்டலுக்கு கிளம்பிச் சென்றனர்.

இதுகுறித்து ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசியலமைப்புப்படியே செயல்படுவேன்.ஒரு குறுகிய காலத்தில் சட்டமன்றத்தை கூட்ட கெலாட் எந்த அஜெண்டாவும் கொடுக்கவில்லை,நிகழ்ச்சி நிரலையும் வழங்கவில்லை. எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடுவதற்கு முன்பு சில விஷயங்களில் மாநில அரசாங்கத்தின் தெளிவான பதில் தேவை.

சாதாரண செயல்பாட்டின் கீழ், சட்டமன்றத்தை கூட்ட 21 நாள் அறிவிப்பு தேவை. சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டப்பட வேண்டிய தேதி அமைச்சரவைக் குறிப்பில் குறிப்பிடப்படவில்லை, அதற்கான எந்த ஒப்புதலும் அமைச்சரவையால் வழங்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.

அனைத்து எம்.எல்.ஏ.க்களின் சுதந்திரத்தையும் சுதந்திரமான இயக்கத்தையும் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்

கொரோனா நெருக்கடியை கவனத்தில் கொள்ளவும், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு அமர்வு எவ்வாறு நடத்த முடியும் என்றும் அது அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com