

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சசி தரூர், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய நாடு இந்து பாகிஸ்தானக மாறிவிடும். மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், ஆசாத் போன்ற இந்திய விடுதலை போராட்ட தலைவர்கள் எதற்காக போராடினார்களோ? அது இல்லாமல் போய் விடும் என கூறினார்.
தொடர்ந்து அவர், 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்றால் நமது நாட்டின் ஜனநாயகம் சிதைந்து போய் விடும். புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டியிருக்கும். இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு, சிறுபான்மையினருக்கான சமத்துவம் மறுக்கப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
எனினும், தரூரின் பேச்சுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இந்த நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் அலுவலகம் நேற்று அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த தாக்குதல் பற்றி தரூர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாரதீய ஜனதா கட்சியின் யுவமோர்சா மற்றும் சங்கி குண்டர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள தொகுதி அலுவலகத்தினை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அவர்கள், கதவுகள், சுவர்கள், வாசல் ஆகியவை மீது என்ஜின் ஆயிலை ஊற்றி உள்ளனர். மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களை விரட்டி உள்ளனர். எனக்கு எதிராக பேனர்களை வைத்தனர். பாகிஸ்தானுக்கு செல்லும்படி கோஷங்களையும் எழுப்பினர் என வெளியிட்டார்.
இந்நிலையில், கேரளாவின் பச்சலூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தரூர் இன்று மாலை வந்துள்ளார்.
அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா கட்சியின் பெண் தொண்டர்கள் உள்பட சிலர் கோஷங்களை எழுப்பியபடி கருப்பு கொடிகளை காட்டினர்.
எனினும் போராட்டக்காரர்கள், தரூரை நெருங்க விடாமல் போலீசார் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தரூருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என்றும் அவரது அலுவலகம் மற்றும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என போலீசார் ஒருவர் கூறினார்.