

புதுடெல்லி,
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.
மேலும் மத்திய-மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவ கவுன்சில் என மூன்று தரப்புக் குழு அமைத்து, கலந்து ஆலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து மூன்று வாரங்களில் முடிவெடுக்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.
இதனைத்தொடர்ந்து ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதில் நடப்பாண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஒபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில், அதிமுகவின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.