மத்தியபிரதேசத்தில் கோர விபத்து; பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மத்தியபிரதேசத்தில் கோர விபத்து; பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு
Published on

போபால்,

மத்தியபிரதேசத்தின் ரத்லம் மாவட்டம் சத்ருண்டா என்கிற கிராமத்தில் சாலையோரமாக உள்ள பஸ் நிறுத்தத்தில் மக்கள் பலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது சாலையில் அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ்சுக்காக காத்திருந்தவர்களின் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதனால் பஸ் நிறுத்தத்தில் இருந்தவர்கள் தலைதெறிக்க ஓடினர்.

எனினும் சுமார் 20 பேர் மீது லாரி மோதியது. இதில் பலர் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், சிலர் லாரி சக்கரங்களில் சிக்கி நசுங்கினர்.இப்படி இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில் 8 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com