

கர்நாடக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் அவரது சகோதரர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து ஆபாச வீடியோ குறித்து எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தங்கள் குடும்பத்தை இலக்காக வைத்து சிலர் சதி செய்து குடும்ப மரியாதையை கெடுத்துள்ளனர். அதனால் இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறினர். அரசு ஆழமாக ஆலோசித்து இந்த விசாரணை குழுவை அமைத்துள்ளது.
மேல்நோட்டமாக பார்க்குபோது இந்த சி.டி.யின் பின்னணியில் அரசியல் சதி இருப்பது தெரிகிறது. சிறப்பு விசாரணை குழு விசாரணையின் மூலம் உண்மைகள் அனைத்தும் வெளியே வரும். அந்த விசாரணை குழுவுக்கு காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை. அவர்கள் வெளிப்படையாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
விசாரணையை வெளிப்படையாக, பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று விசாரணை குழுவின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளேன். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழக்கூடாது என்ற நோக்கத்தில் திடமான நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இதில் யாரையா இலக்காக வைத்தோ அல்லது சிலரை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கமோ இல்லை.
இந்த வீடியோ சி.டி.யை எடுத்தது யார், அவர்களின் நோக்கம் என்ன, என்ன காரணத்திற்காக இந்த வீடியோவை பகிரங்கப்படுத்தினர் என்பது போன்ற அனைத்து தகவல்களும் வெளியே வர வேண்டும். அதற்காகவே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கப்பன்பார்க் போலீசில் ரமேஷ் ஜார்கிகோளி புகார் கொடுத்துள்ளார். அதே போலீஸ் நிலையத்தில் முதலில் புகார் கொடுத்தவர் வாபஸ் பெற்றுள்ளார். விசாரணையில் உண்மைகள் வெளிவரும். அதுவரை நாங்கள் எந்த கருத்தையும் கூற மாட்டோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.