

புதுடெல்லி,
உடல் உறுப்பு தானத்திற்கு 'ஒரே நாடு ஒரே கொள்கை' திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார், உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்காக 'ஒரே நாடு ஒரே கொள்கை' முறையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதற்காக மாநில அரசுகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், உயிரிழந்தவரின் உறுப்பு தானம் பெற பதிவு செய்த நோயாளி சம்பந்தப்பட்ட மாநிலத்தில் வசிக்க வேண்டும் என்கிற நிபந்தனையை நீக்கவுள்ளதாக கூறினார்.
இதன் மூலம் எந்த ஒரு மாநிலத்திற்கும் சென்று, நோயாளிகள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்யலாம் என தெரிவித்த அவர், பதிவு செய்பவர்களுக்கான வயது வரம்பையும் நீக்கியுள்ளதாக தெரிவித்தார்.