ஒரே நாடு, ஒரே கணவன் திட்டம்... பகவந்த் மான் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம்

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மனைவிகளை பகவந்த் மான் புண்படுத்தி உள்ளார் என மத்திய மந்திரி ரவ்நீத் சிங் பிட்டு கூறியுள்ளார்.
சண்டிகார்,
பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குர்பிரீத் சிங் கோகி கடந்த ஜனவரியில், தற்செயலாக துப்பாக்கியால் சுட்டதில் பலியானார். இதனால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசி பா.ஜ.க. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டது என கூறப்படுகிறது.
இந்நிலையில், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் சண்டிகாரில் செய்தியாளர்களின் சந்திப்பில் பேசும்போது, சிந்தூர் பெயரை கொண்டு வாக்குகளை பெற பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.
அவரிடம் நிருபர்கள், பஞ்சாபின் லூதியானா நகரில் பா.ஜ.க.வினர், தேர்தல் பிரசாரத்தின்போது ஆபரேஷன் சிந்தூரை பயன்படுத்துவது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளித்தபோது, இந்த பிரசாரம் பற்றி ஒவ்வொருவரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
நீங்கள் இதனை (சிந்தூர்) எடுத்து கொண்டு சென்று உங்கள் மனைவியிடம் கொடுத்து, மோடியின் பெயரால் எடுத்து கொள் என கூறுவீர்களா? என அந்த நிருபரிடம் திருப்பி கேட்டுள்ளார். இது என்ன ஒரு நாடு-ஒரு கணவர் திட்டமா?, சிந்தூரின் பெயரால் வாக்குகளை கேட்பது. எல்லாவற்றிற்கும் எல்லை உள்ளது என அவர் கூறினார். அவருடைய இந்த பேச்சால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
இதற்கு முன் ஆம் ஆத்மியின் எம்.பி. சஞ்சய் சிங் கூறும்போது, ஒரே நாடு, ஒரே மந்திரி, ஒரே நாடு, ஒரே ரேசன் என்பதுபோன்று, ஒரே நாடு, ஒரே கணவனா? என கூறினார்.
பஹல்காம் தாக்குதலின்போது, பயங்கரவாதிகள் ஆண்களை இலக்காக கொண்டு, அவர்களின் மதம் என்னவென்று கேட்டு படுகொலையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, இந்திய ஆயுத படைகள் தரப்பில் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டன. பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பகவந்தின் சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அக்கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி ரவ்நீத் சிங் பிட்டு, பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மனைவிகளை அவர் புண்படுத்தி உள்ளார். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
இதேபோன்று, பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரீத்பால் சிங் பல்லியாவால் கூறும்போது, ஒவ்வொரு வீட்டுக்கும் சிந்தூர் அனுப்பி வைக்கும் திட்டம் எங்களிடம் கிடையாது. பயங்கரவாதிகள் மதம் என்னவென ஆராய்ந்து, இந்து ஆண்களை படுகொல செய்தனர். பெண்களை அடையாளம் காண சிந்தூரை அவர்கள் பயன்படுத்தினர். இதனால், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது என்று கூறினார்.






