

புதுடெல்லி
ப.சிதம்பரம் எழுதிய 'Speaking Truth to Power' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த நூலை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ப.சிதம்பரம் முன்வைத்த கருத்துகள்:-
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அதுவும் 30 மாநிலங்களைக் கொண்ட நாட்டில் தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஒரே நேரத்தில் லோக்சபாவுக்கும் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லாதது. இது இன்னொரு தேர்தல்கால ஏமாற்று வித்தை.
ஒரே தேசம், ஒரே வரி என்கிற ஏமாற்று வித்தையைப் போல ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பதும் மாயாஜாலம்தான். எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை மாநில கட்சிகள். அவர்களது செயல்திட்டங்கள் குறிப்பிட்ட எல்லைகளைக் கொண்டது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைப்பது கடினம்.
ஒரு மாநில அரசு நாளையே கவிழ்கிறது. லோக்சபா தேர்தல் வரும் வரை 4 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி ஆட்சியேவா அம்மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும்? இது சாத்தியமே இல்லாத ஒன்று.
நாட்டில் 75 லட்சம் வேலைவாய்ப்புகளை மார்ச் மாதத்துக்குள் உருவாக்கப் போகிறோம் என்கிறது மத்திய அரசு. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருந்த போது பிஎப் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 23 லட்சமாக உயர்ந்தது. இதுவே 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியபோது மேலும் 25 லட்சமாக அதிகரித்தது.
ஆனால் தற்போது 2016-17ல் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில் இது எப்படி 75 லட்சமாக உயரும்? இது எப்படி சாத்தியமாகும்?
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானதில் பெரும்பான்மையான காங்கிரஸ் தலைவர்களுக்கு மகிழ்ச்சிதான். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்காக காத்திருங்கள் இவ்வாறு அவர் கூறினார்.