

அகமதாபாத்
முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பிரபுல் படேல் தங்களது இரு குஜராத் பேரவை உறுப்பினர்களில் ஒருவர் பாஜகவுக்கு வாக்களித்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டார். இந்த விவகாரம் இரு கட்சிகளிடையே மனக்கசப்பையும் அதனால் ஒரு பிளவையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனினும் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டான இரு உறுப்பினர்களும் பாஜகவிற்கே வாக்களித்தனர் என்பதையும் அவர் மறுத்தார். கந்தால் ஜடேஜா எனும் உறுப்பினர் மட்டுமே பாஜகவுக்கு வாக்களித்தார் என்றார் பிரபுல் படேல்.
காங்கிரஸ் வேட்பாளரான அகமது படேல் 43 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரேயொரு பேரவை உறுப்பினரான சோட்டூ வாசாவா தனது வாக்கை அகமது படேலுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இந்நிலையில் இவ்வாறு வாக்குகளில் ஏற்பட்ட பிளவு இரு கட்சிகளின் உறவிலும் பிளவை ஏற்படுத்தியுள்ளது என்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. கடந்த வெள்ளியன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு தேசியவாத காங்கிரஸ் வரவில்லை. காங்கிரஸ் கட்சியினர் தங்கள் மீது வைக்கும் அதிருப்திக்கு எதிராகவே இவ்வாறு பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. வரவுள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இரு கட்சிகளிடையே கூட்டணி பற்றி கேட்டபோது அது பற்றி கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். காங்கிரஸ் எங்களை அணுகினால் மீண்டும் கூட்டணி ஏற்படும். கடந்த 2012 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணியில் நாங்கள் இணைந்திருந்தோம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே காங்கிரஸ் கட்சி தங்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என்கிறது. மாநில மூத்தத் தலைவர் அர்ஜூன் மோத்வாதியா கூறும்போது, மாநிலங்களவை தேர்தல் என்பது ஜனநாயகத்தை காப்பாற்ற ஏற்பட்ட மோதல். அப்போது தேசியவாத காங்கிரஸ் எங்களுடன் இணைந்து நிற்கவில்லை. அது எங்கள் இதயத்தை காயப்படுத்துவதாக இருக்கிறது என்றார் மோத்வாதியா.