வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களின் நலனுக்காக ஒன் ஸ்டாப் மையங்கள்: மத்திய அரசு முடிவு

வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களின் நலனுக்காக 9 நாடுகளில் 10 ஒன் ஸ்டாப் மையங்களை மத்திய அரசு திறக்க இருக்கிறது.
வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களின் நலனுக்காக ஒன் ஸ்டாப் மையங்கள்: மத்திய அரசு முடிவு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து பணி நிமித்தம் வெளிநாடு செல்லும் பெண்களில் பலர் ஒப்பந்தப்படி உரிய வேலை கிடைக்காமலும், சம்பளம் வழங்கப்படாமலும், கொத்தடிமை முறையில் நடத்துவது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது மற்றும் வன்முறையால் பாதிக்கப்படுவது போன்ற சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுபோன்ற சம்பவங்களில் இருந்து அவர்களை காக்க பல்வேறு நாடுகளிலும் ஒன் ஸ்டாப் மையங்களை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி முதலில், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தலா ஒரு மையமும், சவுதி அரேபியாவில் 2 மையங்களும் என 9 நாடுகளில் 10 மையங்கள் திறக்கப்பட உள்ளன. அதன்பின்னர் பிற நாடுகளிலும் இந்த மையங்கள் திறக்கப்படும்.

மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் இந்த மையங்கள் அனைத்தும் மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் ஆதரவுடன் செயல்படும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு செயலாளர் ராம் மோகன் மிஷ்ரா தெரிவித்து உள்ளார்.

இந்த ஒன் ஸ்டாப் மையங்கள், வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் மனஅழுத்தத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி, சட்ட உதவி மற்றும் சட்ட ஆலோசனை, மனநல-சமூக ஆலோசனை மற்றும் தற்காலிக அடைக்கலம் வழங்குவது உள்ளிட்ட பல ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com