கர்நாடகத்தில் புகையிலை பொருட்களுக்கு ஓராண்டு தடை

புகையிலை பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறி வந்தார்.
கர்நாடகத்தில் புகையிலை பொருட்களுக்கு  ஓராண்டு தடை
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் அடுத்த ஓராண்டுக்கு புகையிலை பொருட்களை விற்கவும், தயாரிக்கவும் தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குட்காவுக்கு தடை விதிப்பு

கர்நாடகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் மக்களின் உடல் நிலையில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டது. இதையடுத்து, முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்ற பின்பு குட்கா, பான் மசாலா ஆகிய புகையிலை பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறி வந்தார்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் குட்கா, பான்மசலா ஆகிய புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு மற்றும் குடும்ப நலத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 10-ந் தேதியில் இருந்தே அமலுக்கு வருவதாக உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓராண்டுக்கு மட்டும் அமல்

மக்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு மாநிலத்தில் குட்கா, பான் மசாலா ஆகிய புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அடுத்த ஓராண்டுக்கு மட்டும் தடை விதிக்கப்ப டுகிறது. விற்பனையுடன், புகையிலை பொருட்கள் தயாரித்தல், சேமித்து வைத்தல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லுதல் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவை தொடர்ந்து மாநிலம் முழுவதும் குட்கா, பான்மசாலா ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளில் அதிகாரிகள், ஊழியர்கள் சோதனையை தொடங்கியுள்ளனர்.

சட்டப்படி நடவடிக்கை

தடையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடை உத்தரவை மீறி கடைகளில் குட்கா, பான் மசாலா விற்கப்பட்டால், அதுபற்றி உணவு பாதுகாப்பு துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். ஆரோக்கியமான மற்றும் போதை இல்லாத கர்நாடகத்தை உருவாக்க உணவு பாதுகாப்பு துறையுடன் பொதுமக்களும் கைகோர்த்து செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com