

உத்தர் தினாஜ்பூர்
மேற்கு வங்காள அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை முடித்து, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இஸ்லாம்பூரில் இன்று நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, டம் டம் விமான நிலையத்தில் என்னுடைய வாகனத்தின் அருகே மத்திய படைகள் நெருங்கி வந்தன.
அவர்களிடம் என்னுடைய வாகனத்தில் சோதனை செய்யுங்கள் என கூறினேன். திரிணாமுல் காங்கிரசாரின் வாகனத்தில் சோதனை செய்யப்பட்டால், பின்னர் ஏன் பிரதமர் அல்லது உள்துறை மந்திரியின் வாகனத்தில் சோதனை நடைபெறவில்லை?
திரிணாமுல் காங்கிரஸ்காரர்களின் வாகனங்களில் மட்டுமே சோதனை செய்யப்படுமா? நாட்டில் என்ன நடக்கிறது? என கேட்டார். மத்திய மந்திரி பணத்துடன் வருகிறார். உங்களுடைய மத்திய படைகளின் வாகனத்தில் என்ன வருகிறது? என்று எனக்கு தெரியும். உங்களுக்கு துணிச்சல் இருக்கும் என்றால், வேறு யாருடைய வாகனத்திலாவது சோதனை செய்வதற்கு முன்பு தினமும் என்னுடைய வாகனத்தில் சோதனை செய்யுங்கள் என்று ஆவேசத்துடன் கூறினார்.