

ஐஸால்,
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் தற்போது பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மிசோரம் மாநிலத்தில் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் திறக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்த மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது.
மிசோரம் மாநில உயர் மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் தலைமையில் கல்வி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மார்ச் 1 முதல் உயர் கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.