எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி என்பது மாயை, 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெறும்: அமித்ஷா

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி என்பது வெறும் மாயை என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி என்பது மாயை, 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெறும்: அமித்ஷா
Published on

மும்பை,

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா கூறியதாவது:- எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி என்பது வேறுபட்ட ஒன்று. எதிர்க்கட்சிகளின் கூட்டணி நிலைக்கப்போவது இல்லை. அது ஒரு மாயைக்கூட்டணி.

அனைத்துக் கட்சிகளையும் எதிர்த்து 2014 தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தோம். அவர்கள் அனைவரும் பிராந்திய தலைவர்கள், அவர்களால் ஒருவருக்கொருவர் உதவ முடியாது. ஐந்து ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பை நாங்கள் எவ்வாறு உறுதி செய்தோம், ஊழலை எப்படி ஒழித்தோம் ஆகிய விஷயங்கள் தான் தேர்தலில் முன்னிற்கும். எட்டு கோடி இல்லங்களுக்கு கழிப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளோம். 2.5 கோடி இல்லங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். வலுவான அரசு ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு அவசியம்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஷ்கர் தேர்தல் முடிவுகள் நிச்சயம் பாஜகவுக்கு சாதகமானதாக இல்லை. ஆனால் 2019 பாராளுமன்ற தேர்தல் முடிவுகளோடு இவற்றை ஒப்பிடுவது சரியாக இருக்காது. மாநில தேர்தல்களை பாராளுமன்ற தேர்தல்களோடு ஒப்பிடக்கூடாது. ஏனெனில், இரண்டும் வெவ்வேறு களப்பிரச்சினைகளைக் கொண்ட தேர்தல்களாகும். மக்களுக்காக பணியாற்றுவதும், அவர்களை திருப்திபடுத்துவதும்தான் எங்கள் பணியாகும். அதேவேளையில், மக்களின் தீர்ப்பு எங்களுக்கு எதிராக அமைந்தால், அதையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

2014 ஆம் ஆண்டு பாஜக அரசு ஆறு மாநிலங்களில் இருந்தது. தற்போது, 16 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்கிறது. எனவே, 2019 ஆம் ஆண்டு தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என என்னிடம் சொல்லுங்கள்? சமீபத்திய தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆய்வு செய்வோம். 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடிக்கு எதிராக யார் பிரதமர் வேட்பாளராக இருக்கப்போகிறார்கள் என்பது ஒரு விஷயமே இல்லை. எங்கள் பலத்தை முன்னிறுத்தியே நாங்கள் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். பிறருடைய பலவீனத்தின் அடிப்படையில் தேர்தலை சந்திக்கவில்லை.

வரும் பாராளுமன்ற தேர்தலிலும் சிவசேனா கட்சி எங்களோடு இருக்கும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com