

புதுடெல்லி,
திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்டான் சுவாமி (84), எல்கர் பரிஷத் வழக்கில், கடந்த 2020-ஆம் ஆண்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஸ்டான் சுவாமிக்கு ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மும்பையிலுள்ள ஹோலி ஃபேமிலி என்ற மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி ஸ்டான் சுவாமி உயிரிழந்தார். இந்த நிலையில் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சரத் பவார், தேவ கவுடா, மு.க.ஸ்டாலின், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட 10 கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் பீமா கோரேகான் கலவரம் தொடர்பாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும், பொய் வழக்கு பதிவு செய்ய காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்துமாறு குடியரசுத் தலைவரை எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் ஸ்டான் சுவாமி மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கும் இந்த கலவர வழக்கிற்கு சம்பந்தம் இல்லை என்றும் தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகிறது. அதே போல அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதும் கூட அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வந்ததையும், மருத்துவமனையில் அவருக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்பது தொடர்பான குற்றச்சாட்டுகளையும் எதிர்கட்சித் தலைவர்கள் தங்களது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.