எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளியால், இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேசத்தில் சம்பாவில் சமீபத்தில் நடந்த வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது.

அப்போது அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

அதேபோல, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com