

லக்னோ,
உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதேபோன்று மகாராஷ்டிராவின் பந்த்ரா-கோண்டியா மற்றும் பால்கர் என இரு நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் நாகலாந்தில் ஒரு தொகுதி என மொத்தம் 4 மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதேபோன்று மேற்கு வங்காளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
உத்தர பிரதேசத்தில் கைரானா மக்களவை மற்றும் நூர்பூர் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் டுவிட்டரில், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வருகின்றன. எனினும், தொடர்ந்து வாக்காளர்கள் சென்று வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் ஊடக தொடர்பு நிர்வாகி ராஜேந்திர சவுத்ரி பேசும்பொழுது, நூர்பூரில் 140 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சேதமடைந்து உள்ளன என தகவல் வந்துள்ளது. இதேபோன்று கைரானா தொகுதியில் இருந்தும் தகவல்கள் வந்துள்ளன.
கோரக்பூர் மற்றும் பூல்பூர் தொகுதிகளில் அடைந்த தோல்விக்கு பழிவாங்குவதற்காக இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற பாரதீய ஜனதா கட்சி விரும்புகிறது என கூறியுள்ளார்.
இதே தகவலை ராஷ்டீரிய லோக் தள கட்சியின் ஊடக தொடர்பு நிர்வாகி அனில் துபேவும் தெரிவித்துள்ளார். எங்களது இரு கட்சிகளுக்கு சாதகம் நிறைந்த தொகுதிகளில் இதுபோன்ற விசயங்கள் நடந்துள்ளன. இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.