வாஜ்பாய் மரணம் குறித்த இரங்கல் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: வார்டு உறுப்பினர் கைது

வாஜ்பாய் மரணம் குறித்த இரங்கல் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வார்டு உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
வாஜ்பாய் மரணம் குறித்த இரங்கல் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: வார்டு உறுப்பினர் கைது
Published on

அவுரங்காபாத்,

மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்கபாத் மாநகராட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்து சிவசேனா-பா.ஜனதா கட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் சார்பில் இரங்கல் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மஜ்லிஸ்-இட்டெஹாதுல் முசிலிமீன் கட்சி உறுப்பினர் சயத் ரஷீத் எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி பாதுகாப்பு அதிகாரி, சயத் ரஷீத் மீது போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சயத் ரஷீத்தை அவுரங்காபாத் நகர போலீசார் கைது செய்தனர். மேலும் இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்துதல், கலவரத்தை தூண்டிவிடும் வகையில் பேசுதல், பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் என 3 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

முன்னதாக பா.ஜ.க. வார்டு உறுப்பினர்கள், சயத் ரஷீதை கடுமையாக தாக்கியதாக கூறப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக பா.ஜ.க. வார்டு உறுப்பினர்கள் மீது சயத் ரஷீத் போலீசில் புகார் செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com