

புதுடெல்லி,
ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயாக கூட்டணியின் சார்பில் ராம்நாத்கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்திற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமார் அறிவிக்கப்பட்டதும் அவருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையின் பேரில், மீராகுமாருக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
"இசட் பிளஸ்" பாதுகாப்பு என்பது நாட்டின் உயரிய பாதுகாப்பு ஏற்பாடாகும். மிக, மிக முக்கிய தலைவர்கள், மற்றும் பயங்கரவாதிகள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே "இசட் பிளஸ்" பாதுகாப்பு அளிக்கப்படும் இதற்கு முன்பு முன்னாள் சபாநாயகர் என்பதால் மீராகுமாருக்கு எஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி அவருடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் மட்டும் உடன் சென்று வந்தார்.