

புதுடெல்லி,
தமிழ்நாட்டுக்கு, விநாடிக்கு 6,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி நடந்தது. இதில் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் திறப்பை நெறிப்படுத்தி கர்நாடக அரசுக்கு ஆணையத்தலைவர் எஸ்.கே.ஹல்தார் உத்தரவு பிறப்பித்தார். அதாவது தமிழகம் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் கேட்ட நிலையில், வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 11.66 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி அடுத்த நாட்களில் கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் தண்ணீர் போதுமான அளவில் இல்லை என தெரிவித்து கர்நாடக அரசு, ஆணையத்திடம் மேல் முறையீடு செய்தது. தற்போதைய நிலவரப்படி 9 ஆயிரம் கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுத்தால் கர்நாடகத்தில் குடிநீர் வினியோகம் கடும் சிரமங்களை சந்திக்க கூடும் என கர்நாடக அரசு தெரிவித்தது. எனவே தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தது
இதுபற்றி ஆலோசிக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று கூட உள்ளதையொட்டி காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் முன்னதாக கூடி, இரு மாநிலங்களின் நீர் இருப்பு விவரங்களையும், மழை விவரங்களையும் மதிப்பிட்டு இருந்தது.
இந்த சூழலில் டெல்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று (செவ்வாய் கிழமை) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் நீர் திறக்க தமிழ்நாடு அரசு தரப்பில் கோரியிருந்த நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.