

புதுடெல்லியில் உள்ள பிகானேர் இல்லத்தில் மகாத்மா காந்தியின் அரிய புகைப்படங்கள் கொண்ட கண்காட்சி நடந்தது. இதில் காந்தியின் பேத்தியான தாரா காந்தி பட்டாசார்ஜி கலந்து கொண்டார்.
அவர் நிகழ்ச்சியில் பேசும்பொழுது, காந்தி மற்றும் கஸ்தூரிபாய் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டனர். ஒன்றாகவே வளர்ந்தனர். கஸ்தூரிபாய் இல்லையெனில் காந்தி மகாத்மா காந்தி ஆகியிருக்க முடியாது.
ஒரு சாதாரண கஸ்தூரிபாயாக இருந்து, அசாதாரண நபராக அவரை (காந்தி) உருவாக்க முடிந்தது என நான் கூறுவேன். கஸ்தூரிபாய் சாதாரணமாக வாழ்ந்தவர். அதனால் அவர் மிக பெரியவர். அவர் காந்தியை சூப்பர் மனிதராக உருவாக்கினார் என உணர்ச்சிபூர்வமுடன் பேசினார்.
வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான போராட்டம் ஆகியவற்றில் தன்னை வடிவமைத்ததில் கஸ்தூரிபாய்க்கு பங்கு உள்ளது என காந்தி முன்பே ஒத்து கொண்டுள்ளார்.
அவர் ஹரிஜன் என்ற தனது பத்திரிக்கையில் 1938ம் ஆண்டு டிசம்பரில் எழுதியுள்ள கட்டுரையில், எனது எண்ணத்திற்கேற்ப எனது மனைவியை கொண்டு வர முயன்றபொழுது, அகிம்சை பற்றிய பாடத்தினை மனைவியிடம் இருந்து கற்று கொண்டேன் என தெரிவித்துள்ளார்.