

அயோத்தி
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக பல தரப்பினரும் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் தலைமை வழக்குதாரர், சாமியார், மகந்த் பாஸ்கர் தாஸ் (வயது 90) ஆவார். இவர் அயோத்தி நிர்மோஹி அகாடாவின் தலைமை மத குரு. மேலும், நகா ஹனுமதி காதியின் மத குருவாகவும் திகழ்ந்தார்.
இந்த வழக்கில் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்டு, சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சாமியார், மகந்த் பாஸ்கர் தாஸ் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வரும் டிசம்பர் மாதம் விசாரணை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மகந்த் பாஸ்கர் தாசுக்கு கடந்த புதன்கிழமை இரவு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக பைசாபாத்தில் உள்ள ஹர்சன் இதய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணிக்கு மரணம் அடைந்தார்.
மகந்த் பாஸ்கர் தாஸ் உடல், உடனடியாக பைசாபாத் நகா ஹனுமதி காதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து சரயு ஆற்றங்கரையில் அவரது உடல், பிற்பகலில் தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.