ஒரு கட்சி தவிர... அசாம் வெள்ள நிவாரணத்திற்கு சம்பள தொகையை நன்கொடையாக அளிக்க எம்.எல்.ஏ.க்கள் முடிவு

அக்கட்சியின் எம்.எல்.ஏ. மெஹ்பூப் முக்தார் அவையில் இருந்தபோதும், அவர் எதுவும் கூறவில்லை.

ஒரு கட்சி தவிர... அசாம் வெள்ள நிவாரணத்திற்கு சம்பள தொகையை நன்கொடையாக அளிக்க எம்.எல்.ஏ.க்கள் முடிவு
Published on

கவுகாத்தி

அசாமில் வெள்ள நிவாரணத்திற்காக ஒரு கட்சி தவிர, பிற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரு மாத சம்பள தொகையை நன்கொடையாக அளிக்க முன் வந்துள்ளனர்.

அசாமில் பருவமழையை முன்னிட்டு அது தொடர்பான சம்பவங்களில் சிக்கி 70 பேர் வரை பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் மழை, வெள்ளம் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஒரு மாத சம்பளம்

இந்த நிலையில், அசாம் சட்டசபையில் சபாநாயகர் ரன்ஜீத் குமார் தாஸ் இன்று கூறும்போது, நானும், துணை சபாநாயகர் ஹேப்பி தெரான் இருவரும் வெள்ள நிவாரணத்திற்காக ஒரு மாத சம்பள தொகையை நன்கொடையாக கொடுக்க உள்ளோம் என்றார். எங்களுடன், சட்டசபை செயலக பணியாளர்கள் அனைவரும் ஒரு நாள் சம்பள தொகையை நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக வழங்க உள்ளனர் என கூறினார்.

இதனை வரவேற்று, பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரு மாத சம்பள தொகையை நன்கொடையாக அளிக்க முன் வந்துள்ளன.

சபாநாயகர் நன்றி

காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான வஜித் அலி சவுத்ரி கூறும்போது, கடந்த சில நாட்களில் எங்களுடைய கட்சி வெள்ள நிவாரண உதவி தொகையை வழங்கி விட்டது. எனினும், எங்களுடைய கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பள தொகையை நன்கொடையாக வழங்குவார்கள் என்றார்.

இதேபோன்று ஏ.ஐ.யூ.டி.எப்., ஏ.ஜி.பி., பி.பி.எப். கட்சியினரும் இதற்கு ஒப்பு கொண்டனர். எனினும், ராய்ஜோர் தள கட்சி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அக்கட்சியின் எம்.எல்.ஏ. மெஹ்பூப் முக்தார் அவையில் இருந்தபோதும், அவர் எதுவும் கூறவில்லை.

இந்த ஆதரவை வழங்கியதற்காக, ஒவ்வொருவருக்கும் அவை சபாநாயகர் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com