ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷனிடம் தி.மு.க. மனு

ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பிரச்சினை தொடர்பாக, தேர்தல் கமிஷனிடம் தி.மு.க. மனு கொடுத்து உள்ளது.
ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷனிடம் தி.மு.க. மனு
Published on

புதுடெல்லி,

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., திருச்சி சிவா எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோர் நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்,

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுடன் சேர்த்து ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று கடந்த 11-ந் தேதியன்று ஏற்கனவே மனு கொடுத்து உள்ளோம். இது சாதகமாக பரிசீலிக்கப்படவில்லை என்பதால் சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளோம்.

இந்த வழக்கு 15-ந் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஏப்ரல் 8-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி இந்திய தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதுபோன்ற வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுகளின் அடிப்படையிலும், எங்களின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையிலும் உங்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.

தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அந்த 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்ற நிலைப்பாட்டை இந்திய தேர்தல் கமிஷன் எடுத்து இருக்கிறது. இது சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது.

குறிப்பிட்ட தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்த மனுதாரர்கள், தங்களை எம்.எல்.ஏ.வாக அறிவிக்க வேண்டும் என்று அந்த வழக்குகளில் கோரியிருந்ததால்தான் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அரவக்குறிச்சி தேர்தல் வழக்கை பொறுத்தவரை, வழக்கு தாக்கல் செய்துள்ள கீதா என்பவர் தன்னை எம்.எல்.ஏ.வாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை.

திருப்பரங்குன்றம் தொகுதியிலும் அப்படிப்பட்ட கோரிக்கையை மனுதாரர் முன்வைக்கவில்லை. மேலும் அந்த தேர்தல் வழக்கை திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கையில் மனுதாரர் ஈடுபட்டு உள்ளார். எனவே இந்திய தேர்தல் கமிஷன் குறிப்பிடும் சஞ்சீவையா வழக்கில் கூறப்பட்ட உத்தரவு, இந்த 2 தொகுதிகளுக்கும் பொருந்தாது.

மேலும், ஓட்டப்பிடாரம் தொகுதியை பொறுத்தவரை, சபாநாயகரால் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. சுந்தரராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். அந்த வழக்கின் மனுதாரர், தன்னை எம்.எல்.ஏ.வாக அறிவிக்கும்படி கோரியிருந்தாலும், அவரும் தனது வழக்கை திரும்பப்பெறுவதாக கோர்ட்டில் கூறி இருக்கிறார். திரும்பப்பெறுவதற்காக அந்த வழக்கு 19-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. 21 தொகுதிகளிலும் பிரதிநிதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் வேட்புமனு பெறும் இறுதித்தேதி இம்மாதம் 26-ந் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே இதில் போதிய காலஅவகாசம் இல்லாததால் இந்த மனுவை அளிக்கிறோம். எனவே, அந்த 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய திருச்சி சிவா, இந்த பிரச்சினை தொடர்பான வழக்கில் கூடிய விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்று தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com