

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமவெளிப் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது. அதேசமயம், மலை மாவட்டங்களில் மழை பெய்து வருவதுடன் பனிப்பொழிவும் உள்ளது. பலத்த மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலத்த மழை காரணமாக கேதார்நாத் சிவன் கோவிலுக்கு புனித யாத்திரை செல்லும் பாதையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. ருத்ரபிரயாக் மாவட்டம் சோன்பிரயாக்-கவுரிகுண்ட் இடையே மலைப்பாதையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. பிரதான நெடுஞ்சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் யாத்திரை சென்றுகொண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பயணத்தை தொடர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர் மழை, இருள் சூழ்ந்த மோசமான வானிலை நிலவியபோதிலும் மீட்புக்குழுவினர் கடுமையாக போராடி, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த 10450 பக்தர்களை மீட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
மீட்புப் பணிகளை முடிந்தபின், சாலையில் குவிந்திருந்த பாறைகள் மற்றும் இடிபாடுகள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. சிறிது நேரத்தில் அதிகாரிகள் இந்த பணியை முடித்து, நெடுஞ்சாலையைச் சீரமைத்தனர். இதையடுத்து வாகன போக்குவரத்து தொடங்கியது.