

காசிரங்கா,
வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அசாம் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அசாமில் பெய்த கனமழையால் அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ள நீரில் சூழ்ந்துள்ளன.
குறிப்பாக நாட்டில் மிகப்பெரிய வனவிலங்கு பூங்காக்களில் ஒன்றான காசிரங்கா பூங்கா வெள்ள நீரில் மிதக்கிறது. 481 சதுர கி.மீட்டர் பரப்பளவில் 80 சதவீதத்திற்கும் மேலான பரப்பளவில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், பூங்காவில் வசித்து வந்த 140க்கும் மேற்பட்ட வன விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிலவரப்படி 7 காண்டா மிருகம், 122 மான்கள், 3 காட்டுப்பன்றிகள், 3 புள்ளி மான்கள் உள்ளிட்ட விலங்குகள் உயிரிழந்து இருப்பதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
விலங்குகளின் உடல்கள் தினமும் கண்டெடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளார். பிரம்மபுத்திரா நதியின் வெள்ள நீர் காசிரங்கா பூங்காவிற்குள் சென்றதால் சேதம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பூங்காவில் உள்ள வனவிலங்குகள் உணவு தேடி அருகாமையில் உள்ள இடங்களுக்கு செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.