

புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தும் பணி நடந்து வருகிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கிடையே, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இளம் இந்தியா மேலும் வலுப்படுத்துகிறது. நாடு முழுவதிலும் 15-18 வயதுக்குட்பட்ட 70 சதவீத சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தகுதிவாய்ந்த அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.