உத்தரபிரதேசத்தில் விரைவு நடவடிக்கை: 17 போக்சோ குற்றவாளிகள் உள்பட 68 பேருக்கு மரண தண்டனை

87 ஆயிரத்து 465 பேர் 20 ஆண்டுகளுக்கு கீழான சிறை தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
லக்னோ,
உத்தரபிரதேச அரசு, குற்றங்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் 'ஆபரேஷன் தண்டனை' என்ற திட்டத்தை 2023-ல் தொடங்கியது. இதன்கீழ் இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 29 வழக்குகள் தேர்வு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன. அவற்றில் 74 ஆயிரத்து 388 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டு உள்ளன.
இந்த வழக்குகளில் 68 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 8 ஆயிரத்து 172 பேருக்கு ஆயுள் தண்டனையும், 1,453 பேருக்கு 20 ஆண்டுகளுக்கு மேலான தண்டனைகள் வழங்கப்பட்டன. மேலும் 87 ஆயிரத்து 465 பேர் 20 ஆண்டுகளுக்கு கீழான சிறை தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். மொத்தம் 97 ஆயிரத்து 158 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதில் போக்சோ வழக்குகளில் 17 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 619 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் அந்த மாநில அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






