

மாநிலங்களவையில் கேள்வி
நாடாளுமன்ற மாநிலங்களவையில், இதுநாள் வரையில் எத்தனை சுகாதார பணியாளர்களை கொரோனா வைரஸ் தாக்கியது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி அஷ்வினி சவுபே, நேற்று எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
சுகாதாரம் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் பாதித்த சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை குறித்த தேசிய அளவிலான தகவல்கள் சுகாதார அமைச்சகத்தால் பராமரிக்கபபடவில்லை. இருந்தாலும்கூட, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து அவ்வப்போது செரோ சர்வே நடத்தி உள்ளது. (செரோ சர்வேயில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டு இருந்ததா என்பதை கண்டறிய கோவிட் சுவாச் எலிசா உபகரணம் மூலம் ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதில்
அவர்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடிஸ்) உருவாகி இருந்தால், அவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள் என எடுத்துக்கொள்ளப்படுகிறது).
25.7 சதவீத சுகாதார பணியாளர்கள் பாதிப்பு
3-வது செரோ சர்வேயின்படி (டிசம்பர் 2020 முதல் ஜனவரி 2021), இந்தியாவில் மொத்தம் 25.7 சதவீத சுகாதார பணியாளர்களை கொரோனா வைரஸ் பாதித்து இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 26.6 சதவீதம் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கும், 25.4 சதவீதம் மருத்துவ சார்பு பணியாளர்களுக்கும், 25.3 சதவீதம் கள பணியாளர்களுக்கும், 24.9 சதவீதம் நிர்வாக பணியாளர்களுக்கும் கொரோனா தாக்குதல் இருந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கொரோனா பாதிப்புக்குள்ளான பொதுமக்களின் எண்ணிக்கையை விட சற்றே அதிகம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருவதால், கொரோனாவால் எத்தனை சுகாதார பணியாளர்கள் இறந்துள்ளார்கள் என்பது தொடர்பான தகவல்கள் மத்திய சுகாதார அமைச்சகத்தால் பராமரிக்கப்படவில்லை என்றும் அவர் மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.