ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, முறைகேடு நடந்ததாக கடந்த 2017-ம் ஆண்டு மே 15-ந் தேதி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதம்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, கடந்த 2007-ம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெறுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்ததில் முறைகேடு நடந்ததாக கடந்த 2017-ம் ஆண்டு மே 15-ந் தேதி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

இதில் நடைபெற்ற சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு, டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று இந்த மனு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி சுனில் கவுர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:-

ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது. அவரை கைது செய்து, காவலில் வைத்து விசாரிப்பது அவசியமாக உள்ளது. காவலில் வைத்து விசாரித்தால், அதில் நல்ல வேறுபாடு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதற்கு ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சுனில் கவுர், முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். அதுவரை, ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com