

இஸ்லாமாபாத்,
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இவரை ஐ.நா., மற்றும் அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதி என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத் தவா என்ற பெயரில் இயக்கத்தை நடத்தி வருகிறார்.
மேலும், மில்லி முஸ்லீம் லீக் என்ற புதிய கட்சியையும் தொடங்கினார். பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மில்லி முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் என ஹபீஸ் சயீத் அறிவித்துள்ளார். ஆனால், இந்த கட்சிக்கு அந்நாட்டு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளிக்க மறுத்துவிட்டது.
ஹபீஸ் சயீத், தனது மில்லி முஸ்லிம் லீக் அரசியல் கட்சியைப் பதிவு செய்ய அனுமதி கோரி, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு விசாரணையின் போது பாகிஸ்தான் அரசு, ஹபீஸ் சயீத் கட்சியை பதிவு செய்ய அனுமதிக்க கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கிய இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், ஹபீஸ் சயீத்தின் கட்சியை தேர்தல் கமிஷன் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.