

ஐதராபாத்,
நாட்டில் போலீசாரின் உயிர் பலியை விட பசுக்களுக்கு சிலர் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர் என நடிகர் நசிருதீன் ஷா சமீபத்தில் பேசினார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் லாஹூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்பொழுது, சிறுபான்மையோரை எப்படி நடத்த வேண்டும் என நாங்கள் மோடி அரசுக்கு காண்பிப்போம். இந்தியாவில், சிறுபான்மையினர் மற்ற குடிமக்களுக்கு இணையாக நடத்தப்படுவதில்லை என மக்கள் கூறி வருகின்றனர் என பேசினார்.
இந்நிலையில், அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இத்திஹதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பின் தலைவர் அசாதுதீன் ஓவைசி டுவிட்டரில் தெரிவிக்கும்பொழுது, இந்தியாவின் உள்ளடக்கிய அரசியல் மற்றும் சிறுபான்மையோருக்கான உரிமை ஆகியவை பற்றி கான் கற்று கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசியலமைப்பின்படி, அந்நாட்டில் ஜனாதிபதியாக ஒரு முஸ்லிம் நபரே வரமுடியும். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த பல்வேறு ஜனாதிபதிகள் உள்ளனர். உள்ளடக்கிய அரசியல் மற்றும் சிறுபான்மையோருக்கான உரிமை ஆகியவை பற்றி எங்களிடம் இருந்து கான் சஹாப் கற்று கொள்ளும் நேரமிது என தெரிவித்து உள்ளார்.